Saturday 16 August 2014

பாதச் சுவடுகள்



                                      
பாதச் சுவடுகள்

முன்பெல்லாம் தமிழ் கவிஞர்களும் கலைஞர்களும் தங்கள் பாதச்சுவடுகளை பதித்து விட்டுதான் சென்றிருக்கிறார்கள்..
பதித்து வைத்திருந்த பாதச்சுவடுகளை பற்றி நடந்தவர்கள் தான் இன்று மிஞ்சியிருக்கும் கவிஞர்கள்..
புலவர்களின் எண்ணிக்கையும்,
கவிஞர்களின் எண்ணிக்கையும் குறைந்துக் கொண்டே வருகிறது....
மொழியின் வளர்ச்சி மொழிஞரின் வளர்ச்சியை பொருத்தே அமைகிறது..
கவிதைக்கு மறுமலர்ச்சியை தொடங்கியவர் பாரதியார்...
எளிய மொழியில் கவிபாடி பாமரனுக்கும் புரிய செய்து இந்திய விடுதலைக்கு போராடினார்...
பாரதியை பற்றி நடந்தவர் பாரதிதாசன்..
தாசனை வணங்கி வளர்ந்தவர் கண்ணதாசன்..
இவர்களின் வரிசையில் வளர்ந்தவர் தாம் இன்றைய அறுபது வயது தங்கம் வைரமுத்து...
நால்வரில் வைரமுத்துவை மட்டுமே தரிசிக்க முடிந்தது என்னால்...


இவர் தமிழ் கவிஞர் திருவிழாவில் பேசியதை பகிர்கிறேன்...இதோ அவர் மொழியிலையே...

 தமிழ் காதல் மிக்க ஒரு பெருமகன் இந்த விழாவிற்கு தலைமை தாங்கியிருக்கிறார்.அன்று ஆ.பெ.செ.அப்துல்கலாம் குடியரசு தலைவர்.நான் அவர் ரசிகன்.ஐயாவை பார்க்க வேண்டுமென்று அனுமதி கேட்கிறேன்.குடியரசு மாளிகையின் நாங்கு பெருங்கதவுகளும் திறக்கின்றன.என்னை ஒரு காவலர் அழைத்து செல்கிறார்..இங்கே வாருங்கள் எங்கிறார்.சற்று  நேரத்தில் ஐயா வருகிறார்.அவருக்கான அரியாசத்தில் அமர்கிறார்.அந்தக் காவலர் அங்கு நிற்கிறார். நான் பொன்னாடை போற்றுகிறேன்.கண்சாடை செய்கிறார்.காவலர் விடைபெறுகிறார்.காவலர் விடைபெற்ற மறு நிமிடம் தன் ஆசனத்தை விட்டு என் ஆசனத்தில் வந்து அமர்கிறார்.அவரது திறமை,எளிமை,அன்பு.யார் தருவார் இந்த அரியாசனம்.இந்த அரியாசனம் யார் கொடுத்தது?தமிழுக்கு கொடுத்த மரியாதை என்று வைத்துக்கொள்கிறேன்.தமிழ் கவிஞர்க்கு கொடுத்த மரியாதை என்று வைத்துக்கொள்கிறேன்.

ஏன் தமிழை தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறோம்?தமிழ் வெறும் மொழியா?தமிழ் என்பது வெரும் கருத்துக்கருவியா?தமிழ் மொழி என்பது ஒலிக் கூட்டமா?இல்லை..உலக நாகரீகத்துக்கே பங்களிப்பு செய்த பெரிய மொழி தமிழ் மொழி.உயிர்கள் பிறப்பது எதற்கு தெரியுமா?உயிர்கள் பிறப்பதெல்லாம் இன்பத்துக்கு.இன்பம்தான்.செவி வழியாக,நா வழியாக இன்பத்தைத் தேடிதான் இந்த உயிர்கள் பிறக்கின்றன.இன்பத்தில் தேடி அலைந்த மனிதன் இன்பத்தில் முடிகிறான்..இதுதான் மனித வாழ்கை.இந்த இன்பம் எப்படிப்பட்ட இன்பம் என்று சொன்னவர் திருவள்ளுவர்.இந்த இன்பத்திற்காக மெய் மறந்து போகாதே.புற வழியில் போகாதே.இந்த இன்பம் கூட நெறிபடுத்த பட்டிருந்தால் தான் இன்பம்.அற வழியில் வருவதுதன் இன்பம் என்று உலகுக்கு சொன்னவன்தான் தமிழன்.சொன்னவன் தமிழ்க் கவிஞன்.அந்த கவிஞன் கொண்டாட படுகிறான்.இன்னொரு புலவன் சொன்னான், அடே அரசனே, ஒரு நாடு படைகளால் ஆளப்படக்கூடாது..அறத்தால் ஆளப்பட வேண்டும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்னவன் தமிழ் கவிஞன்.இதுவல்லவோ உலகத்தின் சட்டம். இதுவல்லவோ வாழ்க்கையின் சட்டம்.அமெரிக்கா,ஐரோப்பா,ஆஸ்திரேலியா,ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களெல்லாம் இந்த ஒரு விதியைத்தானே பின்பற்றமுடியும்.
 நாகரீகம் கொண்டவன் தமிழன்.போர் முடிந்தது.படைத்தலைவன் தேரில் வந்து கொண்டிருக்கிறான்.காதலி வீட்டில் காத்திருக்கிறாள்.தலைவன் சோலையைக் கடக்கிறான்.கடந்த தலைவன் ஊகிக்கிறான்.அங்கே பூவின் மீது இரு வண்டுகள் காதல் கொண்டிருந்தன.காதல் கொண்டிருந்த வண்டுகளைப் பார்க்கிறான்.தேர்பாகனே! நிறுத்து.அந்த மணியின் நாவை இழுத்துக் கட்டு.ஒலி செய்யாமல் இந்த சோலையைக் கடந்து போ! இந்த தேரின் மணியில் அந்த வண்டுகளின் காதல் கலைந்து விடக்கூடுமோ என்று..
எப்படிப்பட்ட நாகரீகம். எப்படிப்பட்ட உயர்வு.சாதிக்கு எதிரான குரல் சித்தர்களின் காலத்திலயே தொடங்கியது.சித்தர்களின் காலத்திலையே சொன்னான்,ஏழைப் பணக்காரனைப் பற்றி பேச வில்லை,சாதிக்கு எதிராக பேசினான்.ஒருத்தியை பறைச்சி எங்கிறாய்.ஒருத்தியை பார்பணத்தி எங்கிறாய்,ஒருவனை மேல் எங்கிறாய்,ஒருவனை கீழ் எங்கிறாய்.எப்படி இருக்க முடியும்.அடையாளம் காட்ட முடியுமா?என்றான்.உடம்பில் சாதியை அடையாளம் காட்ட முடியும என்றான்.தோலில் அடையாளம் இருக்கிறதா?எலும்பில் அடையாளம் இருக்கிறதா?என்று கேட்டான்.
காக்கைக்குருவி எங்கள் சாதி என்றான் தமிழன்..அப்படி பட்ட தமிழ் கவிதை அறிவிக்க பட்ட மொழியின் நிலையை யோசித்து பார்ப்போம்.தமிழை செம்மொழியாக அறிவித்தார்கள்.அறிவித்தவர்களுக்கெல்லாம் நன்றி.
அப்படி பட்ட மொழி உயரம் தெரிந்திருக்கிறதா?இல்லை.உலக பொன் மொழிகளின் வரிசையில் தமிழ் இல்லை.இந்து மத இலக்கியங்கள் என்று பட்டியலிட்டு பார்த்தால் உலக நூல்களில் தேவாரம் இல்லை திருவாசகம் இல்லை திருமந்திரம் இல்லை..உலக தமிழ் கவிதைகள் என்று தொகுக்கப்பட்டால் அதில் தமிழ் கவிதைகள் இல்லை.
தமிழ் மொழி அழிந்து விடும் என்று யுனெஸ்கோ அறிவித்திருக்கிறதே,அழிகின்ற மொழிகளில் எட்டாவது மொழி என்று அறிவித்திருக்கிறதே,அதை பொய்பிக்கவே இந்தக் கூட்டம்.
உங்கள் குழந்தைகளை தமிழ் படிக்க வையுங்கள்.தமிழ் சொல்லிக்கொடுங்கள்.தமிழ் பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.அதிகார மையங்களில் தமிழ் வேண்டும், நீதி மன்றங்களில் தமிழ் வேண்டும்.
தமிழ் அழியுமென்றால் தமிழர்களின் அலட்ச்சியத்தால் மட்டுமே அழியுமென்பதை மறந்து விடாதீர்கள்.உலகத்திற்கு தமிழைக் கொண்டு செல்வோம்.தமிழை உலகிற்கு கொண்டு செல்வோம் இப்படி ஒரு உறுதிமொழி கொண்டால் தமிழ் வாழும்..நான் ஒன்றும் பெரியக் கவிஞன் அல்ல.நான் ஒன்றும் தமிழுக்கு பெரிய பணி செய்தவன் அல்ல.தமிழுக்கு விசுவாசமான வேலைக்காரன் நான்.தமிழுக்கு விசுவாசமாக இருந்த வேலைக்காரனுக்கே இவ்வளவு சிறப்பு என்றால்,தமிழுக்கு பணி செய்தால்..
வாழ்க தமிழ்,வாழ்க தமிழ் நாடு.யுனஸ்கோ அறிவித்தபடி தமிழ் வீழாது  என்று அடுத்த நூற்றாண்டு வரை சொல்வதற்க்கான செய்திதான் இந்த திருவிழா.வாழ்க தமிழ்..